திங்கள், 2 நவம்பர், 2009

ட்ரஸ்ட் தொடர்பாக TNTJ மீது எழுப்படும் கேள்விகளுக்கு பதில்!


சொந்தமாக மர்கஸோ, பள்ளிவாசலோ இல்லாமல் வாடகைக் கட்டடங்களில் செயல்படும் போது எவ்விதப் பிரச்சினைகளும் இல்லாமல் கட்டுக் கோப்புடன் பணிகள் நடக்கின்றன. ஆனால் சொந்தமாக இடம் வாங்கும் போது தான் சிலர் பல்வேறு கேள்விகளை எழுப்பி குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றனர்.
வாங்கப்படும் சொத்துகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் பதிவு செய்தால் அதனால் கேடுகள் தான் ஏற்படும் என்று காரணம் கூறி உள்ளூரில் தனி அமைப்பை ஏற்படுத்தி அல்லது ஒரு அறக் கட்டளையை உருவாக்கி அதன் பெயரில் சொத்தைப் பதிவு செய்தால் அது பாதுகாப்பானது என்ற கருத்து விதைக்கப்பட்டு அவ்வாறு செய்யக் கூடிய நிலைமையும் உருவானது.
நான் தலைவராக இருந்த போது இது போன்ற நிலையைப் பல்வேறு ஊர்களில் சந்தித்தோம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் எதிர்காலத்தில் இரண்டாகப் பிளவு படலாம்; அது நமது ஊரிலும் எதிரொலிக்கலாம்; அதன் காரணமாக இந்தச் சொத்திலும் பிரச்சினை ஏற்படலாம் என்பது இதற்கு சொல்லப்படும் முதல் காரணம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிளவு படாது என்றெல்லாம் யாரும் உத்தரவாதம் தர முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயமே அவர்களுக்குப் பின் பிளவுபட்டு நின்றிருக்கும் போது தவ்ஹீத் ஜமாஅத் இப்படியே நீடிக்கும் என்று நாம் கூற முடியாது.
இதன் காரணமாக பத்துப் பேர் கூடி டிரஸ்ட் அமைத்து அதன் பெயரில் சொத்து வாங்க வேண்டும் என்கிறார்களே! அந்தப் பத்து பேருக்கு மத்தியில் பிளவு ஏற்படாதா? அவர்கள் பிளவுபட மாட்டார்கள் என்று யாராவது உத்தரவாதம் தர முடியுமா?
ஒரு தகப்பனுக்குப் பிறந்த இரண்டு பிள்ளைகளே சொத்து விஷயத்தில் பிளவுபடுவதை நாம் பார்க்கிறோம்.
எனவே உள்ளூர் அமைப்பு என்று வைத்துக் கொண்டாலும், டிரஸ்ட் என்று வைத்துக் கொண்டாலும் அவர்கள் மத்தியிலும் பிளவு ஏற்படத்தான் செய்யும். மாநில அளவிலான இயக்கத்தில் பிளவு ஏற்படுவதை விட உள்ளூர் அமைப்பில் தான் பிளவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.
எனவே இவர்கள் கூறும் முதல் காரணம் ஏற்புடையது அல்ல. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குர்ஆன், ஹதீஸ் கொள்கையை விட்டு விலகி விட்டால் அப்போது தவறான கொள்கையைச் சொல்வதற்கு நமது சொத்து பயன்படுமே என்ற ஒரு கருத்தும் விதைக்கப்படுகிறது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இப்போது இருக்கும் இதே நிலையில் தன் பயணத்தைத் தொடர்வதற்கு வாய்ப்பு உள்ளது போல் தடம் புரண்டு செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதை மறுக்க முடியாது. இதைக் காரணம் காட்டி டிரஸ்ட் என்று ஆரம்பித்து சொத்து வாங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
பத்துப் பேர் கொண்ட டிரஸ்ட் கொள்கை மாறுவதில் வாய்ப்பு அதிகமா? லட்சக்கணக்கானவர்களைக் கொண்ட ஒரு இயக்கம் தடம் புரளும் வாய்ப்பு அதிகமா? என்று சிந்தித்துப் பார்த்தால் டிரஸ்டில் தான் அந்த வாய்ப்பு அதிகம் ஏற்படும்.
பதினோரு உறுப்பினர்களைக் கொண்ட டிரஸ்ட்டில் ஆறு பேர் கொள்கை மாறிவிட்டால் அதற்கு ஏற்ப அந்தச் சொத்தின் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள முடியும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தில் கடந்த காலங்களில் தியாகம் செய்தவர்கள், குர்ஆன் ஹதீஸை ஆய்வு செய்யும் அறிஞர்கள் மிகுதியாக உள்ளதால் தடம் புரள்வதை அவர்கள் தடுத்து நிறுத்தும் வாய்ப்பு அதிகம்.
எனவே தங்கள் கைப்பிடியில் சொத்தை வைத்துக் கொள்வதற்காக சிலர் கற்பிக்கும் பொய்யான காரணமே இது என்பதில் ஐயமில்லை.
ஒரு சொத்து வாங்கப்படுகிறது என்றால் ஆயிரக்கணக்கான மக்களிடம் பணம் திரட்டியே வாங்கப்படுகிறது. அந்த டிரஸ்ட்கள் சொந்தப் பணத்தில் வாங்குவதில்லை.
மக்கள் பணத்தில் சொத்தை வாங்கிய பின் பணம் கொடுத்த மக்கள் குறைகளைத் தட்டிக் கேட்க முடியுமா? நிச்சயம் முடியாது. டிரஸ்ட்கள் ஊழல் செய்தால், அவர்களை பணம் கொடுத்த மக்கள் பதவி நீக்கம் செய்து நம்பகமானவர்களை நியமிக்க முடியுமா? நிச்சயம் முடியாது.
டிரஸ்ட்கள் என்று யாரைப் பதிவு செய்துள்ளார்களோ அவர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த உரிமையும் இருக்காது. அந்த டிரஸ்டிகள் தடம் புரண்டு தர்காவுக்கு எழுதி வைத்தால் கூட அந்தச் சொத்தை வங்க உதவி செய்தவர்களால் தடுக்க முடியாது.
மேலும் எந்தக் கொள்கையை நிலை நாட்ட சொத்துக்கள் வாங்கப்படுகிறதோ அந்தக் கொள்கையை நிலை நாட்டுவதற்காகப் பலரும் பலவித தியாகங்களைச் செய்திருப்பார்கள். இரத்தம் சிந்தியிருப்பார்கள். ஊர் நீக்கம் செய்யப்பட்டிருப்பார்கள். அவர்கள் டிரஸ்டில் உறுப்பினராக இருக்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் உழைப்பிலும், தியாகத்திலுமே அந்தச் சொத்து வாங்கப்பட்டிருக்கும். அவர்களாலும் ட்ரஸ்டில் நடக்கும் முறைகேடுகள் பற்றி கேள்வி கேட்க முடியாது.
குறிப்பிட்ட பத்து பேரின் கைப்பிடியில் தான் அந்தச் சொத்து இருக்கும். கோடி கோடியாக நிதி குவிந்தாலும் அதைப் பற்றி யாருக்கும் கேள்வி கேட்க சட்டப்படி உரிமை இல்லை.
ஆனால் மாநில அளவில் பதிவு செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் பெயரில் சொத்து வாங்கினால் அதற்கு நிதியளித்தவர்கள் கேள்வி கேட்க முடியும். பாடுபட்டவர்கள் தலையிட முடியும். கிளை நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் அவர்களை மாற்றி விட்டு தகுதியானவர்களை நியமிக்க முடியும். இந்த உரிமைகள் சட்டப்படி ஒவ்வொரு கொள்கைச் சகோதரனுக்கும் உள்ளது.
இந்த இரண்டில் எது பாதுகாப்பானது? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
இன்னும் சொல்லப் போனால் நிதி அளிக்கும் மக்கள் நமக்கெல்லாம் இதில் உரிமை இருக்கும் என்ற எண்ணத்தில் தான் வாரி வழங்கியுள்ளனர். அறக்கட்டளையில் யார் பெயரைக் குறிப்பிட்டு பதிவு செய்தார்களோ அந்தப் பத்து பேரைத் தவிர வேறு எவருக்கும் எந்த உரிமையும் கிடையாது என்று தெரிந்து இருந்தால் உதவியிருக்க மாட்டார்கள்.
நாம் எந்தப் பள்ளிக்கு உதவினாலும் அதில் தலையிடவும் கண்காணிக்கவும் நமக்கு உரிமை இருக்க வேண்டும் என்றால் இயக்கத்தின் பெயரால் சொத்துகளைப் பதிவு செய்வதே பாதுகாப்பானதாகும்.
மேலும் ஒரு பள்ளிவாசல் டிரஸ்ட் பெயரில் பதிவு செய்யப்படுகிறது. அதன் நிர்வாகிகளாக அதன் டிரஸ்டிகள் இருப்பார்கள். அந்த ஊரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பணிகளைச் செய்வதற்காக ஒரு கிளையும் செயல்படும். இந்த நேரத்தில் ஒரு ஊரில் இரட்டைத் தலைமை உருவாகும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆலோசனைக் கூட்டத்தை அந்தக் கட்டடத்தில் நடத்தும் போது ’டிரஸ்ட் வேறு ஜமாஅத் வேறு’ என்று சொல்லி தவ்ஹீத் சகோதரர்களை வெளியேற்றும் நிலையும் ஏற்படும்.
டிரஸ்டை வளர்த்து விட்டு நாளைக்கு வெளியேறுவதை விட இப்போதே வெளியேறி தனித்துச் செயல்படுவது தான் நன்மை பயக்கக் கூடியது என்பதை இதிலிருந்தும் அறியலாம்.
இப்படி டிரஸ்ட் அமைத்தவர்கள் பலரும் முரண்பட்ட பலரையும் வைத்து பிரச்சாரம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம்.
மேலும் அந்தச் சொத்தில் மற்றவர்களால் பிரச்சினை ஏற்பட்டால் மாநில அளவில் போராடி அதைச் சரி செய்யும் வாய்ப்பும் இயக்கத்திற்குத் தான் உண்டு. டிரஸ்ட் என்றால் அவர்கள் தான் அத்தனை பிரச்சினைகளையும் சுமந்தாக வேண்டும்.
தவ்ஹீத் ஜமாஅத் பெயரில் சொத்து வாங்கினால் உள்ளூர் மக்களுக்கு அதிகாரம் இருக்காது என்றும் கருத்து விதைக்கப்படுகிறது. இவர்கள் உருவாக்க என்னும் டிரஸ்டில் தான் அந்த நிலை ஏற்படும். தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை உள்ளூர் நிர்வாகிகளை தலைமை மூலம் நியமிப்பது இல்லை. உள்ளூர் உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்கள் தான் சொத்தை நிர்வகிப்பார்கள்.
ஜாக் போன்ற நியமன இயக்கத்துக்குத் தான் இந்த வாதம் பொருந்தும். கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை அதன் உறுப்பினர்களால், பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படும் இயக்கத்துக்கு இது அறவே பொருந்தாது.
இந்தக் காரணங்களையெல்லாம் கவனத்தில் கொண்டு தான் முந்தைய தலைமை டிரஸ்ட் பெயரில் சொத்து வாங்கக் கூடாது; அதற்கு நிதி உதவியும் ஒத்துழைப்பும் செய்யக் கூடாது என்று முடிவு செய்து நடைமுறைப்படுத்தி வந்தது.
இதை எல்லாம் கவனத்தில் கொண்டு எனது தலைமையில் நிர்வாகக் குழு நீண்ட ஆய்வு செய்து சில முடிவுகளை எடுத்தது.
1-இனி மேல் எந்தச் சொத்து வாங்குவதாக இருந்தாலும் தமிழ்நாடு தவ்ஹீத்தின் உள்ளூர் கிளை பெயரில் தான் வாங்க வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் கிளையின் சம்மதத்துடன் மாநிலத்தின் பெயரிலும் வாங்கலாம்.
2-இந்த முடிவை எடுப்பதற்கு முன்னர் பல ட்ரஸ்டுகள் உருவாக்கப்பட்டிருந்தன. அவ்வாறு உருவாக்கப்பட்ட டிரஸ்டுகளைப் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கெனவே டிரஸ்ட் என்று அமைத்து விட்டதால் அவர்கள் இயன்ற வரை தவ்ஹீத் ஜமா அத்தின் கீழ் செயல்படுவது தான் பாதுகாப்பானது என்று வலியுறுத்துவது.
3- அதில் நடைமுறைச் சிக்கல் இருந்தால் இந்த டிரஸ்ட் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை கோட்பாடுகளின் கீழ் செயல்படும்; அதன் வரவு செலவு உள்பட அனைத்திலும் தலைமை தலையிட அதிகாரம் உண்டு. தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத இயக்கத்தினரைப் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பதில்லை என்று எழுத்து மூலமாக எழுதித் தந்தால் மட்டுமே அதை அங்கீகரிப்பது
இதன் அடிப்படையில் தான் கடையநல்லூர் இஸ்லாமியக் கல்லூரி, கும்பகோணம் அந்நூர் மதரஸா மேலப்பாளையம் அல் இர்ஷாத் ஆகியவை இயங்கி வருகின்றன.
4- தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பிப்பதற்கு முன் நான் தமுமுகவில் இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட ட்ரஸ்ட் தொடர்பாக தனியாக மாநில செயற்குழு கூடியது. முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட்டிலும், முஸ்லிம் ட்ரஸ்டிலும் தவ்ஹீத் சகோதரர்களும் அதற்கு எதிரானவர்களும் இருப்பதால் அதில் உறுப்பினராக நீடிப்பதா அனைவரும் விலகிவிடுவதா என்று என்று செயற்குழுவில் வைக்கப்பட்டது. அந்த இரண்டு ட்ரஸ்ட்களிலும் தவ்ஹீத் சகொதரர்கள் தான் அதிக நிதி அளித்துள்ள்னர். எனவே அதில் இருந்து விலகினால் உணர்வும் இன்ன பிற சொத்துக்களும் தவ்ஹீதுக்கு எதிராகப் போய் விடும் என்று செயற்குழு ஒட்டு மொத்தமாகத் தீர்மானம் செய்தது. அதன் அடிப்படையில் தான் அந்த இரண்டு ட்ரஸ்டுகளிலும் தவ்ஹீத் சகோதரர்கள் இருந்து சொத்தைக் காப்பாற்றி வருகிறார்கள்.
எங்கள் அமைப்பின் செயற்குழு ஒப்புதலுடன் ஒரு முடிவு எடுக்கப்பட்டிருக்கும் போது அமைப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அதை மாற்றுமாறு கேட்க உரிமை இல்லை. (இவர்களும் அப்போது இந்த முடிவுக்கு ஜால்ரா போட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயற்குழுவோ பொதுக் குழுவோ மேற்கண்ட இரண்டு ட்ரஸ்ட்களையும் மற்றவர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் முடிவு செய்தால் அடுத்த நிமிடமே தவ்ஹீத் சகோதரர்கள் அதற்குக் கட்டுப்பட்டு அதில் இருந்து விலகி விடுவார்கள்.
இவர்களைப் போல் எதிரிகளுடன் சேர்ந்து கொள்ள மாட்டார்கள்.
மதுரையைச் சேர்ந்த சகோதரர் ஜமாஅத் பெயரில் எழுதித்தர மறுத்து பி.ஜே அவர்களின் பெயரில் ஒரு சொத்தை எழுதித் தந்தார். அதை பி.ஜே வைத்துக் கொண்டாலும் யாரும் கேட்க முடியாது.
ஆனாலும் புதிய நிர்வாகம் மாற்றம் நடந்த அந்த தினத்தில் தான் அந்தச் சொத்து பத்திரம் பி.ஜே அவர்களின் கையில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் மூலம் கிடைத்தது.
அன்றோடு பி.ஜே அவர்களின் பொறுப்பு முடிவதால் அந்தப் பத்திரத்தை தற்போதை புதிய நிர்வாகிகளிடம் அன்றே பி.ஜே அவர்கள் ஒப்படைத்து விட்டார்கள்.
எப்போது மாற்றிக் கேட்டாலும் மாற்றித் தர தயார் என்றும் தெரிவித்து விட்டார்கள்.
ஒரு பெயரில் இருந்து இன்னொரு பெயருக்கு மாற்றுவதற்கு பத்திரச் செலவு ஏற்படும். இதுவே தாமதத்திற்கு காரணம்.
ஃபித்னாக்களை கிளப்புவதற்காக  நிறைய பணம் செலவிட்டுக் கொண்டு இருக்கின்றவர்கள் பத்திரச் செலவை  ஒப்புக் கொண்டால் நாளையே அந்த மதுரை சொத்தும் மாற்றப்பட்டு விடும் இன்ஷா அல்லாஹ்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக